Total Pageviews

Total Pageviews

Saturday, May 22, 2010

வந்தே மாதரம்

வந்தே மாதரம்

பாரதியார்

வந்தே மாதர மென்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குது மென்போம் (வந்தே)

சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மமித் தேசத்தி லெய்தின ராயின்
வேதிய ராயினு மொன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினு மொன்றே (வந்தே)

ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவ ரன்றோ?
சினத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

ஆயிர முண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றிற் பிறந்தோர் - தம்முட்
சண்டை செய்தாலும் சகோதர ரன்றோ? (வந்தே)

ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கி லனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கு மந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை யிகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

No comments:

Post a Comment